வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: சிக்குகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி; உதவியாளர் கைதானார்!!
சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் விரைவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது,
திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண்துறை செயற்பொறியாளராக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அண்மையில் நெல்லை பகுதியில் வேளாண்துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதனை நேர்மையான முறையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முத்துக்குமாரசாமி மேற்கொண்டார். ஆனால் சென்னையில் இருந்து வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட பலர் முத்துக்குமாரசாமியை தொடர்பு கொண்டு தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார் முத்துக்குமாரசாமி. இந்த நிலையில் நீங்கள் நியமித்த நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்று புது நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்த முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நேரடி தொடர்பிருக்கிறது என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த வேளாண்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
பின் இந்த வழக்கை கடந்த சில நாட்களாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்களில் ஒருவரான பூவையாவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இந்த சம்பவத்தில் விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications