நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜாமீன் கோரி மனு செய்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருநெல்வேலி: வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீண்ட தாமதத்திற்குப் பின்னர் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொறியியல் துறையில் காலியாக இருந்த ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பியதில் அமைச்சர், அதிமுக பிரமுகர்களால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகதான் அவர் தற்கொலை செய்ததாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டுமென காங்கிரஸ் கட்சி முதலில் பிரச்சினை எழுப்பியது. தொடர்ந்து அநைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் குதித்தன.
இதையடுத்து முதலில் கட்சிப் பதவிகளிலிருந்தும், பின்னர் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் அக்ரி நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஏப்ரல் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் வேளாண்துறை தலைமைப் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதால் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமைப் பொறியாளர் செந்தில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது அதனை தள்ளுபடி செய்து கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்பின்பு நீதிமன்ற காவல் முடிந்ததைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மு.செந்தில் ஆகியோரை நீதிமன்றத்தில் 17 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆஜர்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதித்துறை நடுவர் (பொறுப்பு) செந்தில்குமார், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரிடமும் விசாரணை நடத்தி, இருவருக்கும் இம் மாதம் 30 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
செந்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அக்ரி மட்டும் இதுவரை ஜாமீன் கோராமல் இருந்து வந்தார். இது பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் நேற்று அக்ரியும் ஜாமீன் கோரி மனு செய்தார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவரது சார்பில் வழக்கறிஞர் ராஜு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.