லோக்சபா தேர்தலில் வார்டு அளவில் வாங்கிய வாக்குகளை ஆய்வு செய்கிறது அதிமுக
சென்னை: வார்டுவாரியாக அதிமுக பெற்ற வாக்குகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதால், பிற கட்சிகளைவிட குறைவான வாக்குகள் பெற்ற வார்டுகள் அடங்கிய பகுதிகளின் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பதவி பறிபோகும் அச்சத்திலுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில், 39 தொகுதிகளில் போட்டியிட்ட அ.திமு.க., 37 இடங்களில் வெற்றி பெற்றது. தருமபுரியில், பா.ம.க.,வும், கன்னியாகுமரியில், பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. இதையடுத்து, அத்தொகுதிக்கான, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், அமைச்சர் ஆகியோரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டன.

ஒன்றிய செயலாளர் பட்டியல்
கோவையில் அதிமுக வெற்றி பெற்றாலும், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணனைவிட அவர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததால் நகர மேயராக இருந்த அதிமுகவின் செ.மா.வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர், மாவட்ட செயலாளர், மேயர் பதவிகளை தொடர்ந்து, ஒன்றிய, நகர செயலாளர் பதவி பறிப்பு பட்டியல் தயாராகி வருகிறது.

வாக்குகள் ஆய்வு
இதற்காக, மாவட்டந்தோறும், சட்டசபை தொகுதி மற்றும் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் வாரியாக பதிவான ஓட்டுகள் விவரம் ஆய்வு செய்யப்படுகின்றன. தருமபுரி மக்களவை தொகுதியில், மேட்டூர் சட்டசபை தொகுதியும், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட நிர்வாகத்தின்கீழ் செயல்படுகின்றன.

தருமபுரி தலைவலி
தருமபுரியில் பல வார்டுகளில் பாமகவைவிட, அதிமுக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. எனவே ஓட்டுகளை விட்டுக்கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகராட்சியில், ஓட்டுச்சாவடி 132-ல் அ.தி.மு.க. 352 ஓட்டுகளும், தி.மு.க. 449 ஓட்டுகளும் பெற்றன. தி.மு.க.,வுக்கு, 97 ஓட்டு கூடுதலாக கிடைத்துள்ளது. இதேபோல, கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் மட்டும், 145, 146, 151, 158 ஆகிய ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறது.

அச்சத்தில் சேலம் அதிமுகவினர்
சேலத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களாக இருக்கும் பலரின் வார்டுகளில், தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதால், நகர செயலர், சேர்மன், கவுன்சிலர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகும் பயத்திலுள்ளனர். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு மற்றும் மேட்டூர் தொகுதிகளில், தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகள், கூடுதல் ஓட்டு பெற்றுள்ளதாக கூறப்படுவதால் அ.தி.மு.க.,வினர் தங்கள் கட்சி பதவி பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications