அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்... எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் சாலை மறியல் !
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்பூர் அருகே தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுகொண்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நகலை சசிகலாவிடம் முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். இதையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஆனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இதனை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் திரண்ட 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், அண்ணா சிலையில் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications