ஜெயலலிதா நினைவிடத்தில் 4வது நாளாக குவியும் கூட்டம்… கதறி அழுது பெண்கள் அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் 4வது நாளாக இன்றும் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் 4வது நாளான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பெண்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து, உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி காலமானார் ஜெயலலிதா. அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 4வது நாளாக இன்றும் அதிமுக தொண்டர் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்த்து கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள், வெளி மாநிலங்களில் உள்ள அதிமுகவினர் தொடர்ந்து வண்ணம் உள்ளனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அதிக அளவில் மக்கள் குவிந்து வருவதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.