உஷாராக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யும் எடப்பாடி தரப்பு!
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச்செயலரை தேர்வு செய்வதில் எடப்பாடி தரப்பு மும்முரமாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா அரியலூர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார். ஆனால் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களோ, சட்டசபை நடைபெறாத நிலையில் கொறடா உத்தரவு செல்லாது; உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாகவே இருக்கிறது என வாதிடுகின்றனர்.

ஆளுநருக்கு நெருக்கடி
தற்போதைய நிலையில் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடியார் மீது நம்பிக்கை இல்லை என 19 எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்திருக்கின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடியார் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொதுச்செயலர் உத்தரவு
இந்நிலையில் சட்டசபையை கூட்டினால் எடப்பாடியார் அரசுக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அதிமுகவின் பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவின் பேரில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும். அப்படியானால் முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராகத்தான் எம்.எல்.ஏக்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலை உருவாகும்.

பொதுக்குழு
ஆகையால் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கிவிட்டு புதிய பொதுச்செயலராக ஓபிஎஸ்ஸை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனராம். இதனைத் தொடர்ந்து சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆளுநர் முடிவு
அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா பிறப்பிக்கும் உத்தரவை மீறும் அத்தனை எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். அந்த எம்.எல்.ஏக்கள் தவிர்த்து எஞ்சிய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications