லிஸ்ட் எப்பம்மா ரிலீஸ் பண்ணுவீங்க... காத்திருக்கும் அதிமுக "வேட்பாளர்கள்"!
சென்னை: சட்டசபை தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பதைப் பற்றி அதிமுக இன்னமும் அறிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கியுள்ள ஜெயலலிதா, வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடுவார் என்று அதிமுகவினர் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும், தயாராகி வருகின்றன. விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்து திமுகவில் வரும் 7ம் தேதி வரைக்கும் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேமுதிகவில் விருப்பமனு கொடுத்தவர்களில் 90 சதவிகிதம் பேரிடம் நேர்காணல் முடிந்து விட்டது.
அ.தி.மு.க.,வில் இன்னமும் நேர்காணல் துவங்கவில்லை. கூட்டணியா? தனித்து போட்டியா? என்பதை ஜெயலலிதா இன்னமும் அறிவிக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை இன்னமும் அறிவிக்காமல் உள்ளதால் ஆளுங்கட்சியும் இன்னமும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருப்பதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ சீட் யாருக்கு?
அ.தி.மு.க.வில் யாருக்கு, சீட் கிடைக்கும் என்பதை, யாரும் கணிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு முதல்வர் நினைத்தால், யாருக்கு வேண்டுமானாலும், வாய்ப்பு கிடைக்கும். எனவே, விருப்பமனு கொடுத்த அனைவருமே அனைவருமே, எம்.எல்.ஏ கனவில் மிதந்து வருகின்றனர். அவர்கள், எப்போது நேர்காணல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2 லிஸ்ட் தயார்
மாவட்டச் செயலாளர்கள் கொடுத்துள்ள லிஸ்டு ஒரு பக்கம் இருக்க, தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் தொடர்பான தகவல்களை லோக்கல் உளவுத் துறை மூலம் திரட்டியிருக்கிறாராம் ஜெயலலிதா.

புதியவர்களுக்கு சீட்
ஜெயலலிதா தயார் செய்து வைத்துள்ள பட்டியலில் புதியவர்கள்தான் இருக்கிறார்களாம். இதனால் லிஸ்ட் தயார் செய்து வைத்துள்ள அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அப்செட் ஆகியுள்ளனராம். எம்.எல்.ஏ சீட்டுக்காக மூட்டையில் பணம் வாங்கிய மாவட்டச் செயலாளர்கள் எப்படி மூவ் செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்களாம்.

விஜயகாந்த் முடிவு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் லிஸ்ட் வெளியானது. இம்முறை வேட்பாளர் லிஸ்ட் ஏற்கனவே தயாராக வைத்திருந்தும் வெளியிட தாமதமாக காரணம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்கின்றனர்.

சூழலுக்கு ஏற்ப ஜெ முடிவு
விஜயகாந்த் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் கூட்டணியை முடிவுசெய்ய இருக்கிறாராம்.பாஜக உடன் விஜயகாந்த் கூட்டணி என்று அறிவித்தால் தனியாக நிற்கலாம் என்றும், திமுக உடன் விஜயகாந்த் சேர்ந்தால், குட்டி கட்சிகளையும், பாஜகவையும், தன்னுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம்.

யாருக்கு எந்த தொகுதி
ஒருவேளை கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவாகும் பட்சத்தில் யாருக்கு எந்த தொகுதி என்று முடிவு செய்து அதன் பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிடலாம் என்றும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம். எதிர் முகாமின் வியூகம் எப்படி என்று தெரிந்த பின்னரே காய் நகர்த்தலாம் என்று ஜெயலலிதா யோசிக்க காரணம், வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று உளவுத்துறை கொடுத்த அறிக்கைதானாம்.

மார்ச் 11ல் வேட்பாளர் லிஸ்ட்
வேட்பாளர் பட்டியல் ரெடியாக இருந்தாலும், கூட்டணி பற்றி முடிவு செய்ய பின்னர் தொகுதிக்குச் சிலரை கூப்பிட்டு நேர்காணல் என்ற பெயரில் சிலரை சந்திக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக்கிறாராம். இந்த நேர்காணல் நடந்து முடிந்தவுடன் மார்ச் 11ம் தேதிக்கு மேல் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்றும் போயஸ் கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மவுனம் சாதிக்கும் ஜெ
களத்தில் எதிரிகளே இல்லை என்று கூறிய ஜெயலலிதா, இப்படி யோசிக்க காரணம் தோல்வி பயம்தானாம். 234 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட தயாரா என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரேமலதா சவால் விட்டும், முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் சாதிக்கிறார் என்றும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
எது எப்படியோ ஜெயலலிதாவின் சஸ்பென்ஸ் ஆட்டம் அரசியல் களத்தில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மைதான்.












Click it and Unblock the Notifications