அதிமுகவில் தொடரும் வேட்பாளர் மாற்றம்.. பிரசாரத்திற்கு செல்லாமல் பதுங்கும் வேட்பாளர்கள்
சென்னை: எப்போது வேட்பாளர் மாற்றம் பற்றிய அறிவிப்பு வருமோ என்ற அச்சம் நிலவுவதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த தயக்கம், அதிமுகவில் அதிகமாக உள்ளது.
227 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட உள்ள அதிமுக, தனது வேட்பாளர்களை அவ்வப்போது மாற்றி வருகிறது. இதுவரை 8 முறை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதன் மூலம், 17 பேர் கைக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டனர்.

இதனால், பணம் செலவிட்டு பிரசாரத்தில் இறங்க அதிமுக வேட்பாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கோடை வெயிலை காரணமாக காட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள் பல வேட்பாளர்கள்.
தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், ஜாதி தலைவர்களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்பதோடு பிரசாரத்தை முடித்துக்கொள்கிறார்கள். வேட்புமனு தாக்கல் தொடங்கும் வரை இந்த நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது.
திமுகவிலும் அவ்வப்போது வேட்பாளர்களை மாற்றும் வேலை நடக்கிறது. இருப்பினும், முக்கிய பிரமுகர்கள் தங்களை மாற்றமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தீவிர பிரசாரங்களை நடத்திவருகிறார்கள்.
தேமுதிகவினரும், பாமகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் வேட்பாளர் மாற்றம் பற்றி அதிகமாக கவலைப்படவில்லை.












Click it and Unblock the Notifications