ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.. டிடிவி தினகரன் நம்பிக்கை
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கட்சியில் சிலர் இல்லை என்பதால் வாக்குகள் சிதறாது எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள திருநின்றவூரில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிலைகளை திறந்து வைத்தார்.
அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கட்சிப் பாகுபாடின்றி அனைவரது வீட்டிலும் ஜெயலலிதா புகைப்படம் உள்ளது. அதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். எம்ஜிஆர் மறைந்த போது கட்சியை அழிக்க நினைத்தவர்களை முறியடித்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து அதிமுக ஆட்சி நடைபெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவை விட்டு சிலர் பிரிந்து சென்றுவிட்டதால் வாக்குகள் சிதறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.