அப்பல்லோவில் ஜெ. ... 45வது தொடக்க விழாவைக் கொண்டாட தயாராகும் அதிமுக...!
சென்னை: ஜெயலலிதாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானதை அடுத்து அதிமுகவின் 45ம் ஆண்டு தொடக்க நாள் விழா வரும் 17ம் தேதி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலக வளாகத்தி்ல் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து கொடியேற்றி வைப்பார் என அதிமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி 44 ஆண்டுகள் முடிவடைந்து, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி 45 வது ஆண்டு தொடங்குகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் தொடக்கவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஜெயலலிதா தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் கட்சியின் ஆண்டு விழா வரும் 17ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதியன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய சிலைக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து அதிமுக கொடியினை ஏற்றி வைத்து தொடக்க நாள் மலரை வெளியிட உள்ளார்.
நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள் என அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.