மாமூல் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளரை ரவுடி போல தாக்கிய அதிமுக கவுன்சிலர்! வீடியோவால் பரபரப்பு
சென்னை: வேளச்சேரியில், துணிக்கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை அதிமுக கவுன்சிலர் ஒருவர் ரவுடியை போன்று, கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
178வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் எம்.ஏ.மூர்த்தி (அதிமுக). இவர் கடந்த மாதம் 28ம் தேதி, வேளச்சேரியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் துணி வாங்க சென்றுள்ளார்.
அப்போது, துணிக்கு பணம் கொடுக்காமல், கடை உரிமையாளரிடமே பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. முறையாக உரிமம் பெற்று கடை நடத்துவதால், தேவையில்லாமல் ஏன் பணம் தர வேண்டும் என்று கடை உரிமையாளர் கேட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த (!) மூர்த்தி, அந்த கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உடைக்க முற்பட்டார். கவுன்சிலரோடு வந்திருந்த ஒரு நபர்தான், அவ்வப்போது, மூர்த்தியை பிடித்து வைத்து, நிலைமை கைமீறாமல் பார்த்துக்கொண்டார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மூர்த்தி இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.