அதிமுக செயற்குழு கூட்டம்: 6முறையாக முதல்வரான ஜெ.வுக்கு பாராட்டு
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஜெயலிதாவிற்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 6வது முறையாக முதல்வரான ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. தோல்வி அடைந்த மாவட்டங்களில் நிர்வாகிகளை மாற்றி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், இரண்டுமுறை செயற்குழுவையும் கூட்டவேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும், செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.
அதிமுக செயற்குழு
அந்தவகையில், அதிமுக கூட்டும் இக்கூட்டத்துக்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டது. அனைவரும் அந்த அழைப்பிதழோடு வருகைதர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் உற்சாகம்
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வருகை தந்தார். அவருக்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களைப் பார்த்து கையசைத்த ஜெயலலிதாவைக் கண்டு தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
முக்கிய தீர்மானங்கள்
செயற்குழுவின் முடிவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 14 தீர்மானங்களில் முக்கியமாக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியைப் பிடித்தது, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும், 6வது முறையா முதல்வராக பதவியேற்றது போன்றவற்றுக்கு ஜெயலலிதாவைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம் #AIADMK pic.twitter.com/4vTcAINji3
— Oneindia Tamil (@thatsTamil) June 18, 2016
ஜெயலலிதா சிறப்புரை
முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ள இந்த செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிகழ்த்தும் சிறப்புரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதாவின் சிறப்புரையும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிர்வாகிகளின் பங்களிப்பு, தொண்டர்களின் பங்களிப்பு குறித்து பேசிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.