அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு - சசிகலா நீக்கப்படுவார்?
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு செப்டம்பர் 12ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10.35 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் நீக்கப்பட்டு செங்கோட்டையனை நியமித்தார் சசிகலா. ஆனால் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அழைப்பிதழ்களுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூடும் பட்சத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நீக்கும் பட்சத்தில் சசிகலாவின் நியமனமும், தினகரனின் நியமனமும் செல்லாததாகிவிடும்.
யார் தலைமையில் பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்களோ அதை நிர்வாகிகள் கூடி மீண்டும் சசிகலாவை நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே அதிமுக பொதுக்குழுவில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் நிர்வாகிகளும் இந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுக்குழு கூடும் வரைக்கும் டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்களோ என்று அதிமுக தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications