மத்திய அரசை எதிர்க்காமல் உண்ணாவிரதம் என்று கபட நாடகம் ஆடுகின்றனர் - மு க ஸ்டாலின்
உண்ணாவிரதம் என்ற பேரில் அதிமுகவினர் கபட நாடகம் ஆடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது போல் கபட நாடகம் ஆடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் நடத்துவது போராட்டம் இல்லை, அடிமைத்தனமான கபட நாடகத்தை நடத்துகின்றனர் என்றார்.
எடப்பாடி அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட தகுதி இல்லை, சட்டசபையில் அமைச்சர்களுடன் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகம் மீது அக்கறை இருந்தால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற தகுதியில்லாமல் அரசாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி அரசு துளி அளவிற்கு கூட அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் குதிரைபேரம் ஆட்சி நடக்கிறது, காரணம் அவர்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள மத்திய அரசிடம் அடிமைத்தனமாக இருக்கிறார்கள். இதனால்தான் திமுகவினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.