வெள்ள நிவாரணம்: அரசு ஊழியர்களின் பேனரை கிழித்து விட்டு ஜெ. பேனரை கட்டிய அதிமுகவினர்
தருமபுரி: தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்களின் வெள்ள நிவாரண பொருட்களின் மீதுதான் அதிமுகவினர் கை வைத்தனர். தங்களுடைய நிவாரண பொருட்களாக அதிமுக தலைமைக்கு கணக்கு காட்டினர் என்று கூறப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் சார்பில் கொடுக்கப்படும் வெள்ள நிவாரணப் பொருட்களை பறித்து, அதில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பேனரை கட்டி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர் மற்றும் ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதிக்கு ஊதியம் பிடிக்க கட்டாய விருப்பக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவினரின் அடாவடி செயல் வேறு அரசு ஊழியர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றது. திரை நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும், தன்னார்வ தொண்டு நிருவனங்களும் தாங்களாகவே முன்வந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்துக் கொள்ளும்படி அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், விருப்ப கடிதம் வழங்கும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் என சம்பளம் வழங்கும் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர் மற்றும் ஊழியர்களும் விருப்பக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதனிடையே தருமபுரி மாவட்டம் அரூர் யூனியனில் பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் பி.டி.ஓ. ஆனந்தன், தாசில்தார் அதியமான் ஆகியோர் தலைமையில் திரட்டிய சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை லாரியில் ஏற்றி கடந்த 8ம் தேதி கோட்டாட்சியர் கவிதா கொடியசைத்து சென்னைக்கு அனுப்பினார்.
லாரி புறப்பட்ட போது அங்கு வந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், எங்களுடைய பொருட்களையும் எற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்துள்ளார் கோட்டாட்சியர். அதில் "அரூர் ஒன்றியம் வெள்ள நிவாரணம்' என்ற பேனர் கட்டப்பட்டிருந்தது. சென்னைக்கு உடனே அனுப்பாமல் அந்த லாரியை அரூர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு கொண்டு சென்றாராம் ஒன்றிய செயலாளர் முருகன். லாரியில் கட்டப்பட்டிருந்த அதிகாரிகளின் பேனரை கிழித்து விட்டு அம்மா வெள்ள நிவாரணப் பொருட்கள்- தருமபுரி மாவட்ட அ.தி.மு.க என்ற கட்சிப் பேனரை கட்டி மறுநாள்தான் அனுப்பினார்களாம்.
அரூர் அ.தி.மு.க. அலுவலக வாசலில் இருந்து 2 லாரிகளும் 2 டெம்போக்களும் அ.தி.மு.க. பேனரோடு கிளம்பியதைப் பார்த்து அரசு அதிகாரிகளால் ஆதங்கப்படத்தான் முடிந்துள்ளது. தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களை பிடுங்கி ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர் தற்போது அரசு ஊழியர்களின் வெள்ள நிவாரண பொருட்களையும் அடித்து பிடுங்கி தங்கள் பெயரில் கணக்கு காட்டுவது அடாவடித்தனம் என்று குற்றம் சாட்டுனர் பாதிக்கப்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications