'உள்ளாட்சியில் தினகரனுக்கு ஒற்றை இலக்கம்தான்!' - தலைமைக் கழகத்தில் கொதித்த எடப்பாடி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தீவிரமாக தயாராகி வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். ' தினகரனுக்கும் தி.மு.கவுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி கிடைக்கப் போகிறது. தினகரனுக்கு ஒற்றை இலக்க சதவீதத்தில்தான் வாக்கு கிடைக்கப் போகிறது' என நிர்வாகிகளிடம் பட்டியலிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளின் தாக்கம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் பரவிக் கிடக்கிறது. தினகரன் பெற்ற வெற்றியில் வெப்பம் மறைவதற்குள், உள்ளாட்சித் தேர்தலில் வலுவைக் காட்டத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்.
இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில், கட்சிக்கென தனியாக நாளிதழ், தொலைக்காட்சி, விவாதங்களில் பேசுவதற்கு 12 பேர் கொண்ட குழு, உள்ளாட்சி வியூகம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பன்னீர் செல்வம் ஆவேசம்
இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ' உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் சந்திக்க இருக்கிறோம். அதற்கு ஏற்ப நாம் தயாராக வேண்டும். தொகுதிக்குள் கழக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிரமாக மக்கள் பணியைச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் பெறக் கூடிய வெற்றி, எதிரிகளுக்கு மிகப் பெரிய பாடமாக அமைய வேண்டும்' எனப் பேசியிருக்கிறார். கூட்டம் முடிந்த பிறகும் நிர்வாகிகளிடம் தீவிரமாக விவாதித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

95 பிளஸ் 95
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " சட்டமன்றத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முடிவில் இருக்கிறார் தினகரன். அவருடைய செயல்களை எல்லாம் முதல்வர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவருடைய கவனம் எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில்தான் இருக்கிறது. இன்று நிர்வாகிகளிடம் பேசும்போது சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். இதை அமைச்சர்களும் ஆமோதித்தனர். முதல்வர் பேசும்போது, ' கட்சியின் 95 சதவீத கிளைச் செயலாளர்களும் 95 சதவீத ஒன்றிய செயலாளர்களும் நம் பக்கம் இருக்கின்றனர். நமது தலைமையின்கீழ் 35 சதவீத வாக்குகளை ஆர்.கே.நகரில் வாங்கியிருக்கிறோம். அதாவது, தி.மு.கவைவிட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம்.

5 சதவீதம்தான் தினகரனுக்கு
உள்ளாட்சித் தேர்தலில் இந்த சதவீதம் அதிகரிக்கும். தினகரனால் வார்டுக்கு ஒரு சின்னம் எனப் போட்டியிட முடியாது. எப்படிப் பார்த்தாலும் 5 சதவீத வாக்குகளை தினகரன் பெறலாம். இதனால் பெரிய மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்திவிட முடியாது. மக்கள் மத்தியில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அவருடைய நினைப்புக்கு சம்மட்டி அடி போல உள்ளாட்சித் தேர்தல் அமையும். தி.மு.கவுக்கும் உள்ளாட்சித் தேர்தல் கடுமையாக இருக்கப் போகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகளை அப்படியே அடுத்து வரும் தேர்தலுக்குக் கொண்டு செல்வோம். உண்மையான தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்போம். இப்போதே ஒவ்வொரு வார்டையும் நம்வசம் கொண்டு வாருங்கள்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அமைச்சர்களும், ' அனைத்து மாநகராட்சிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்' என உறுதியளித்தனர்" என்றார் விரிவாக.

தினகரன் வியூகம்
அதேநேரம், தினகரன் அணியிலும் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். " மார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. மாவட்டவாரியாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் என செல்வாக்குமிக்கவர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அவர்களையே வேட்பாளர்களாக களமிறக்கும்போது மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற முடியும். அதற்கேற்ப வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. ஆர்.கே.நகர் வெற்றியை அடுத்து, உள்ளாட்சியிலும் எங்கள் கொடியே பறக்கப் போகிறது" என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications