தினகரனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் கைதா? எச்.ராஜா பரபரப்பு தகவல்
சென்னை: பாஜகவின் தமிழ் மாநில தலைவரான தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் எச்.ராஜா இருவரும் தமிழக அரசியலில் நடைபெறப்போவதை முன்கூட்டியே பூடகமாக சொல்லக் கூடியவர்கள் என்று பெயர் எடுத்துள்ளனர்.
தமிழக அரசையே, பாஜகதான் நடத்தி வருகிறது என்பதற்கு இவர்களின் கருத்துக்களே சான்று என்பது தமிழக கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் டெல்லியில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில், எச்.ராஜா, பேஸ்புக்கில் தொடர்ச்சியாக சில கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்.
அடுத்து அமைச்சர்களா?
"தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது..அடுத்து அதிமுக அமைச்சர்கள் ???" என ஒரு போஸ்டில் கருத்து தெரிவித்துள்ளார் ராஜா.
கிண்டல்
பொதுசெயலாளர் பெங்களுரு சிறையில்!!! துணை பொதுசெயலாளர் திஹார் சிறையில் !!! அருமையான இயக்கம் அதிமுக !!! , என்று கிண்டல் செய்துள்ளார்.
திருப்பங்கள்
"தினகரன் கைது..தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருகிறது" என்றும் ஒரு போஸ்டில் தெரிவித்துள்ளார் எச்.ராஜா. மேலும் தமிழ் ஒரு சிறந்த மொழி என பிரதமர் மோடி பேசி, 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியையும் எச்.ராஜா ஷேர் செய்துள்ளார்.
பாஜக தலைமை மனநிலை
தினகரன் கைது நடவடிக்கைக்கு பிறகு எச்.ராஜா கூறியுள்ள இந்த தொடர் கருத்துக்கள் பாஜகவின் மனநிலையை பிரதிபலிப்பவையாக உள்ளதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.