பாஜகவுக்கு பதிலடி கொடுக்கிறதா அதிமுக? தலைமைச் செயலக ரெய்டுக்கு அதிமுக எம்.பி கண்டனம்
தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டுக்கு அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டுக்கு அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐடி அதிகாரிகள் தமிழக தலைமைச் செயலகத்தில் நடத்திய சோதனை, கூட்டாட்சி தத்துவத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது. கூட்டாட்சி தத்துவத்தின் சில அடிப்படை கேள்விகளை எழுப்பும் வகையில் இச்சோதனை உள்ளது.

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த வேண்டுமானால் அது குறித்து மாநில அரசிடம் அனுமதி பெறுவதுதான் மரபு. ஆனால் அது மீறப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஐடி சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரசிலிருந்து, அதிமுகவில் சமீபத்தில் இணைந்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். இணைந்த கையோடு அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை ஐடி சோதனையை கண்டிக்காத நிலையில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பொதுவாக அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் இருந்துதான் முக்கியமான விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியாகும். அல்லது முதல்வரிடமிருந்து வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் மாநிலங்களவை எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதுவும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று ஆளும் அதிமுகவின் ஒரு தரப்பு நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் எதிர்க்காமல் இருப்பதே நல்லது என்ற நிலைப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் போயஸ் இல்லம் வரை ரெய்டு போய்விட்டதால் இப்போது எதிர்த்து அடிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications