“சொன்னீங்களே, செஞ்சீங்களா?” ... அதிமுக புகார் மனு... விசாரிப்பதாக லக்கானி தகவல்
சென்னை: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் திமுக விளம்பரங்களைத் தடை செய்யக்கோரி, அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
‘சொன்னீங்களே செஞ்சீங்களா?' என்ற தலைப்பில் அதிமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டி, தனியார் தொலைக்காட்சிகளின் திமுகவின் தேர்தல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரங்கள் ஆளும் அதிமுக அரசிற்கும், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக, அந்த விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தொலைக்காட்சிகளில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதை தடுக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதற்கிடையே, நாளை மறுநாள் தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அப்போது வேட்புமனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், "ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஒன்றில் பிழைகள் இருந்தால் மற்றொரு வேட்பு மனு எடுத்துக்கொள்ளப்படும்.
பொது தொகுதியாக இருந்தால் வேட்பாளர் ரூ.10 ஆயிரம் டெபாசிட்டும், தனி தொகுதியாக இருந்தால் ரூ.5 ஆயிரமும் டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் எத்தனை வாகனத்தில் வேண்டுமானாலும் ஊர்வலமாக வரலாம். ஆனால் அந்த வாகனத்திற்கான செலவு அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேட்பாளரின் வாகனத்தையும் சேர்த்து 3 வாகனத்துக்கு தான் அனுமதி. தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் செல்ல வேட்பாளரையும் சேர்த்து 5 பேருக்கு தான் அனுமதி.
வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரி வேட்பாளர்களிடமிருந்து மனுவை பெறும்போது எழுந்து நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு தான் வாங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. வேட்புமனுவை வாங்கும்போது தேர்தல் அதிகாரி எழுந்து நிற்பதும், உட்காருவதும் அவரவர் விருப்பம்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், விசாரித்து புதிய வாக்காளர் பட்டியல் அவ்வப்போது அரசியல் கட்சியினருக்கு அளித்து வருகிறோம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications