ஒரிஜனல் ஸ்லீப்பர் செல்களை ஆர்.கே.நகரில் திடீரென களமிறக்கிய தினகரன்.. திகிலில் அதிமுக
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமது ஸ்லீப்பர் செல்களை களமிறக்கியிருப்பதன் மூலம் அதிமுகவுக்கும் அமைச்சர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் தினகரன்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் பதுங்கியிருந்த ஒரிஜனல் ஸ்லீப்பர் செல்களை தினகரன் களமிறக்கியது கண்டு அதிமுக வெலவெலத்துக் கிடக்கிறதாம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தை ரணகளப்படுத்தி வருகின்றனர் தினகரன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாரியிறைக்கின்றனர். பணம் இறைக்கப்படுவதால் குடும்பப் பெண்கள் குவிகின்றனர் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் களமிறங்கியிருக்கிறார் தினகரன். அதற்கேற்ப, பிரஷர் குக்கரைக் கையில் வைத்துக் கொண்டு வலம் வருகின்றனர் தினகரன் ஆட்கள்.

இரட்டை இலைக்கு எதிராக
வார்டு வாரியாக ஆட்களை அமர்த்தி தேர்தல் வேலை பார்த்து வருகிறார் தினகரன். நம்பிக்கை துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை வீழ்த்துவதுதான் இந்தத் தேர்தலின் ஒரே நோக்கம் என இரட்டை இலைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார் தினகரன்.

உச்சகட்ட பிரசாரத்தில் தினகரன்
அமைச்சர்களைக் களமிறக்கி தேர்தல் வேலை பார்த்தாலும் சசிகலா வகையறாக்களின் பிரசாரத்தால் விழி பிதுங்குகின்றனர் தொண்டர்கள். திமுகவின் மருது கணேஷை எதிர்த்துதான் தினகரன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு தினகரன் ஆட்கள் வேலை பார்க்கின்றனர். தேர்தலில் மதுசூதனனை மூன்றாம் இடத்துக்குத் தள்ளும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் தினகரன்.

திடீரென வந்த தினகரன் ஆட்கள்
கடந்தமுறை தினகரனுக்கு வாக்கு கேட்க வரும் பிரமுகர்களுக்காக வாடகை வீடுகள் பிடிக்கப்பட்டிருந்தன. அந்த வீடுகள் எதையும் தினகரன் ஆட்கள் காலி செய்யவில்லை. எப்படியும் தேர்தல் வரும் எனத் தெரிந்து கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே கள வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் தொகுதிக்குள் ஸ்லீப்பர் செல்களாக களமிறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள் தரப்பினர்.

நாளொன்றுக்கு எவ்வளவு தெரியுமா?
ஒவ்வொரு நாளும் பிரசாரத்துக்குச் செல்லும்போது, தினகரனுக்காக வாக்கு சேகரிக்க ஏராளமான பெண்கள் திரள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 300 ரூபாய் கொடுக்கின்றனர் தினகரன் தரப்பினர். கைக்குழந்தையோடு எந்தத் தாய்மார் வந்தாலும் அந்தக் குழந்தைக்கும் சேர்த்து 300 ரூபாய் கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரம் பெண்கள் வீதம் தினகரன் பிரசாரத்துக்காக களமிறங்குகின்றனர். இப்படியொரு ஆதரவு தி.மு.கவுக்குக்கூட கிடையாது.

களைகட்டும் தினகரன் முகாம்
அ.தி.மு.கவிலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கீழ்மட்ட நிர்வாகிகள் வசதியில்லாமல் இருக்கின்றனர். அவர்களில் பலர் தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எங்கிருந்து பணம் வருகிறது என்றே தெரியாத அளவுக்குக் கரன்ஸி நோட்டுக்கள் பறக்கிறது. முன்கூட்டியே தொகுதிக்குள் கொண்டு வந்து பதுக்கிவிட்டார்களோ என சந்தேகிக்கும் அளவுக்குக் காட்சிகள் அரங்கேறுகிறது. பாகம் வாரியாக 20 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என்ற வீதத்தில் பணம் பிரிக்கப்பட்டுவிட்டதால், பெரிய அளவில் எந்த இடத்திலும் பணத்தைப் பறிமுதல் செய்ய முடியாது. அந்தளவுக்கு விநியோகத்தில் களை கட்டுகிறது தினகரன் முகாம் என்கின்றனர் ஆர்.கே.நகர் தொகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications