நேரம், காலம் பார்த்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்த அதிமுக
சென்னை: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு இணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க. சார்பில், புதன்கிழமையான இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவடைகிறது. எனவே, மார்ச் மாத துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதுமே, அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை முந்தி கொண்டு செல்வது ஜெயலலிதா வழக்கம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதே யுக்தியை பின்பற்றினார். இப்போதும், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிவிட்டது அதிமுக.

நாடாளுமன்ற தேர்தல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவாகியுள்ளது. இந்த வெற்றியை சட்டசபை தேர்தலில் தக்க வைக்க அதிமுக முயன்றுவருகிறது.

முருகன் ஆசி
தேர்தல் பிரசார நோட்டீஸ்களை, சிறுவாபுரி முருகன் கோவிலில், சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டிருந்ததாம்.

ஏஜென்ட்
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஓட்டுகளைப் பெறுவதற்காக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஜெயலலிதா பேரவை சார்பில், ஏஜென்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஸ்து பிரச்சாரம்
அந்த ஏஜென்டுகளுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தலைமையில், இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்க, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வாஸ்துப்படி வடகிழக்கு பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் பிரசாரம்
திண்டுக்கல்லில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனரும் நத்தம் தொகுதி செயலருமான ஆர். வி. என். கண்ணன் தலைமையில் இன்று அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பிரசாரம் தொடங்கியது.












Click it and Unblock the Notifications