ஈஷா மீதான புகார்களில் உண்மையுள்ளது.. யோகா மைய ஊழியர் தகவல்
கோவை: ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இருப்பதாக அங்கு சுமார் 8 வருடங்களாக பணியாற்றிய செந்தில் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா அமைப்பில் அக்கா, தங்கைகள் இருவர் சன்னியாசிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், வலுக்கட்டாயமாக தலை முடி அகற்றப்பட்டதாகவும் அப்பெண்களின் தந்தை காமராஜ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண்களிடம் போலீஸ் எஸ்.பி ரம்யா, விசாரித்தபோது, அவர்கள் தாங்களாகவே விரும்பி சன்னியாசம் பூண்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், யோக மையத்தில் சன்னியாசியாக விரும்பும் பெண்களின் கர்ப்பப்பை அகற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியே வந்தன.
இப்படி, எது உண்மை, எது பொய் என தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ள நிலையில், ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் மீதான புகார்களில் உண்மை இருக்கிறது என்று, கடந்த 8 ஆண்டுகளாக ஈஷாவில் பணியாற்றிய செந்தில் என்பவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது இவ்வாறு செந்தில் கூறியுள்ளார். யோகா வகுப்புக்கு வருபவர்கள் குறி வைத்தே சன்னியாசிகளாக்கப்படுவதாகவும், ஈஷாவில் கடந்த ஆண்டு இறந்த சுவாமி ஏகாக்ரா என்பவர் அதிகப்படியான போதையில் இறந்ததாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.