மாணவர் சரவணன் மரணத்தில் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு பங்குண்டு… தந்தை கணேசன் குற்றச்சாட்டு
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் மாணவர் சரவணனின் மரணத்தில் எய்ம்ஸ் டாக்டர்களின் பங்கு இருப்பதாக அவரது தந்தை கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த சரவணன் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். திடீரென கடந்த ஜுலை 9 தேதி தற்கொலை செய்த கொண்டார் என்று கூறப்பட்டது. இது தற்கொலை இல்லை என்றும் கொலை தான் என்றும் தொடக்கத்தில் இருந்தே அவரது தந்தை கணேசன் போர் கொடி தூக்கி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், அண்மையில் வெளியான சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வலது மணிக்கட்டில் விஷ ஊசி போடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.இதனையடுத்து, அவரது தந்தை கணேசன், தனது மகன் சரவணனின் மரணத்தில் எய்ம்ஸ் டாக்டர்களின் பங்கு இருக்கிறது குற்றம்சாட்டியுள்ளார். டாக்டர்களுக்கு தெரியாமல் தன் மகனுக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
மேலும், சரவணன் நன்றாக படிப்பவன், அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் கூறிய கணேசன், சரவணனின் கொலையை தற்கொலை என்று மூடி மறைத்து வழக்கை முடிக்க டெல்லி போலீசார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.