ஜெ. உடல்நிலை பற்றிய அறிக்கையில் முக்கிய முரண்பாடு.. ஸ்டாலின் பேட்டி
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன. அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: டெல்லி எய்ம்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் கேட்டுக் கொண்டார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையில் எத்தனை முரண்பாடுகள் உள்லன. அவரது சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர் சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டன. ஆனால் மருத்துவ அறிக்கையில் போயல் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா மயங்கிய நிலையிலேயே அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.
இந்த இரு வேறு அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர் செல்வத்தை விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றும் விஜயபாஸ்கரும், அவரை விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் ஓ.பன்னீர் செல்வமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்நிலையில் இந்த மருத்துவ அறிக்கையில் குளறுபடிகள் உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஓபிஎஸ் கூறுவது உண்மையா, விஜயபாஸ்கர் கூறுவது உண்மையா, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை உண்மையா அல்லது எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை உண்மையா என்பது குறித்து தெரியவரும்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சந்திக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.