ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்
சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் வந்துள்ளது தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது.
மேக்சிஸ் குரூப்தான் 2007 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணத்தை கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அவர்தான் மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினார்.
அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி ராஜேஷ்வர் சிங் முன்னிலையில், கார்த்தி சிதம்பரத்தை ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கார்த்தி சிதம்பரம் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.