சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் ! விமானங்களை இயக்குவதில் சிரமம்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழையால் விமான நிலைய ஓடுபாதையும் மூடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை தொடந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னை - திருச்சி சாலையை இணக்கும் ஜிஎஸ்டி சாலை வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீரில் சிக்கியுள்ள வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழைநீர் சென்னை விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 11.30 மணிவரை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இன்று காலை முதல் பெய்த கனமழையால் மீனம்பாக்கத்தில் 18 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications