சேலத்தில் பயங்கரம்.. அஜீத் மன்ற தலைவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
அஜீத் ரசிகர் மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொன்றுள்ளனர்.
சேலம்: அஜீத்தின் சேலம் ரசிகர் மன்ற தலைவர் பெயர் விஜய். இவரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த விஜய். இவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். அத்துடன் டிராவல்ஸ் ஒன்றிலும் தற்காலிகமாக டிரைவராக இருந்து வந்தார்.

விஜய் மீது வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது போதாமல் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு, அதற்கு பின்னர் விஜய் ஜாமீனில் விடுதலையானார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு பெண்ணை உயிருக்குயிராக நேசித்து கல்யாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ராம்நகர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விஜய் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் ஒன்று விஜய்யை கொலை செய்ய முயன்றது. அவர்களை கண்டதும் சுதாரித்து கொண்டு தப்பித்து ஓடினார். எனினும் அந்த மர்மநபர்கள் விஜய்யை விடவே இல்லை. அரிவாளை தூக்கிக் கொண்டு வெறியுடன் துரத்தியே, ஓட ஓட வெட்டினர். அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார் விஜய்.
தற்போது விஜய் ஜாமீனில் மட்டும்தான் வந்துள்ளார். இன்னும் அவர் மீது நிலுவையில் பல வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் அவரை மர்மநபர்கள் கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த 4 கொலைகாரர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துள்ளனர். எந்த வழக்கு சம்பந்தமாக விஜய் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறித்து விசாரணையையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். கொடுக்கல்-வாங்கல் காரணமாக இந்த படுகொலை நடைபெற்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications