அழகர் மலையிலிருந்து கிளம்பினார் கள்ளழகர்.. நாளை எதிர்சேவை.. 30ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்!
வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் கள்ளழகர்.
Recommended Video

மதுரை : வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் கள்ளழகர். மதுரைக்கு வரும் அழகரை ஆங்காங்கே எதிர்சேவை செய்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் வரவேற்கின்றனர்
காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம். விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் மதுரை நகர் வரை எட்டியது. சித்திரை திருவிழாவைக்காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த சப்தம் அழகரின் புறப்பட்டை உணர்த்தியது.

தனக்காக காத்திருக்கும் பக்தர்களைக் காண அழகரும் கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் கோயிலை விட்டு தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

சிறப்பு பூஜைக்கு பின் இரவு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார். நாளை அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்கின்றனர். தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இளைப்பாறும் அழகர் 30ஆம் தேதி அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.












Click it and Unblock the Notifications