எல்லோரும் மறக்காம ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டுருங்க.. அழகிரி அட்டாக்! திமுகவுக்கு ஷாக்
மதுரை: நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வரும் தகவல்கள் மதுரை வட்டார திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க குடும்பத்தார் சிலர் முயற்சி மேற்கொண்டனர். குறிப்பாக, அவரது சகோதரி செல்வி முயன்றார். ஆனால், ஸ்டாலின் எதிர்ப்பால் அழகிரிக்கு அல்வாதான் கிடைத்தது.
ஆனால் 2 வருடங்கள் பிறகு, சில வாரங்கள் முன்பு சென்னையில் கருணாநிதியை அழகிரி சந்தித்து பேசியதால், விரைவில் கருணாநிதியின் கண்கள் பனித்து, நெஞ்சம் இனிக்க வாய்ப்பு இருக்கும் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர்.

அவசர பேட்டி
ஆனால், ஸ்டாலினோ, அந்த சந்திப்பு, தந்தை-மகன் சந்திப்புதான் அரசியல் சந்திப்பு இல்லை என்று அவசரமாக பேட்டி கொடுத்து, அழகிரி ஆசையை கலைத்துவிட்டார்.

எதிர்பார்ப்பு
இதையடுத்து, அழகிரி மதுரையில், ஓரம்கட்டப்பட்டு உள்ளார். அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில், மதுரைக்கு பிரசாரத்திற்கு வரும் கருணாநிதி, தன்னை சந்திப்பார். சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று அழகிரி நம்பிக் கொண்டிருந்தார்.

சந்திக்கவில்லை
ஆனால் மதுரைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார். ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்கவேயில்லை.

குடும்பம் வேண்டாமா
கருணாநிதி இவ்வாறு நடந்து கொண்டது, அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கோபப்படுத்தியுள்ளது. பேரன், பேத்தியை கூட பார்க்க கருணாநிதிக்கு மனது கிடையாதா என்று அழகிரியின் மனைவி கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக தோல்வி
இதனால் கடுப்பான அழகிரி, 2 தினங்கள் முன்பு ஆங்கில செய்தித்தாளுக்கு அழித்த பேட்டியில், மதுரை மாவட்டத்தின் எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது என்று அழகிரி ஆக்ரோஷம் காட்டியிருந்தார். இதற்கான காய் நகர்த்தலை அழகிரி இன்று தொடங்கியதாக கூறப்படுகிறது.

ரெட்டை இலை
மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த மதுரை மற்றும் சுற்றுவட்டார திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications