"கலைஞரின் பீஷ்மரே.." மதுரையை தெறிக்க விட்ட அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்
மதுரை: மத்திய முன்னாள் அமைச்சரும், திமுகவின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க. அழகிரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் விதவிதமான கட்அவுட்டுகளை வைத்து கொண்டாடி தெறிக்க விட்டுள்ளனர்.
ஜனவரி 30ம் தேதியான நேற்று அழகிரி பிறந்த நாளாகும். வழக்கமாக அவரது பிறந்த நாளின்போது, கிடா வெட்டி, பிரியாணி விருந்து வைத்து தனது தொண்டர்களை குஷிப்படுத்துவார் அழகிரி.
ஆனால் திமுகவில் இருந்து அழகிரியை, திமுக தலைவர் கருணாநிதி விலக்கியது முதல் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சாதாரணமாக நடந்து வருகின்றன.

மதுரையில் இல்லை
அதிலும், இந்த வருடம் பிறந்த நாளின்போது அழகிரி மதுரையிலேயே இல்லை. அவரால் கட்சியில் வளர்த்து விடப்பட்ட பலர் இப்போது ஸ்டாலின் பக்கம். எனவே, அவரின் தீவிர ஆதவாளர்கள் மட்டும் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகளையும் மற்றும் பிரியாணி பொட்டலங்களையும் வழங்கினார்.

இனிப்புகள்
முன்னாள் மண்டலத் தலைவர் சின்னான் சார்பில் புதுஜெயில் சாலையில் அழகிரி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அழகிரி பிப்ரவரி 1ம் தேதி மதுரை வருகிறாராம். அன்றைய தினம் நேரில் சென்று வாழ்த்த உள்ளதாக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

கிழக்கு சூரியனே
இதனிடையே மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் வைத்திருந்த போஸ்டர்கள் தாறுமாறு. 12வது வட்ட முன்னாள் செயலாளர் கண்ணன் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், கிழக்கு சூரியனே வாழ்க பல்லாண்டு என வாழ்த்தப்பட்டிருந்தது.

கலைஞரின் பீஷ்மரே
முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் சார்பில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரில் கலைஞரின், கழகத்தின் பீஷ்மரே, வாழ்க பல்லாண்டு என கூறப்பட்டிருந்தது. மற்றொரு போஸ்டரில், களையிழந்த தமிழகத்தை வண்ணம் தீட்டும் ஸ்கெட்ச்சே என தமிழ் சினிமா தலைப்பை வைத்து டைமிங்காக போட்டிருந்தார்கள். இதனால் மதுரை களைகட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications