ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல திமுக நிக்கலையா? எனக்கு தெரியாதே?
நான் திமுகவில் இல்லை... ஆர்.கே. நகரில் தி.மு.க., போட்டியிடாதது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
உட்கட்சி பூசல் காரணமாக தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி, திமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் தனி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஒரு ஆண்டுகாலமாக அடக்கி வாசித்து வருகிறார். திமுகவில் மீண்டும் நுழைவதற்கான சமாதான படலங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சகோதரரின் மகன் அறிவுநிதியின் திருமண வேலையில் பிஸியாக இருக்கும் அழகிரி அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கியிருக்கிறார். அழகிரியின் ஆதரவாளர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் பக்கம் சென்றுவிட்டனர். மீதிபேர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டனர்.
கடந்த ஜூன் 3ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல அழகிரி கோபாலபுரம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் வரவில்லை. இந்நிலையில் அழகிரி நேற்று காலை 9:00 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரிடம் கேள்விகளை கேட்க செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அலைபேசியில் பேசியபடியே காரில் ஏறப் போனார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
'ஆர்.கே.நகரில் தி.மு.க., போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளது ஏன்?' என கேட்டனர்.அதற்கு அழகிரி ''அதுகுறித்து அவர், அப்படியா? நான் திமுகவில் இல்லை அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என பதில் அளித்தார்.
மேலும் 2016 தேர்தல் திமுகவுக்கு எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக எப்படி வெற்றி பெற்றது என்று கடந்த மக்களவைத் தேர்தலில்தான் பார்த்தோமே என்று கூறினார். எப்படியோ? மீண்டும் அழகிரி மீண்டும் தனது பேட்டிகளின் மூலம் அரசியல் வெடி போட ஆரம்பித்துவிட்டார்.