மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று 'வாகனங்கள்' பந்த்: வெறிச்சோடிய சாலைகள்
சென்னை: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
மத்திய அரசு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சட்ட திருத்தத்தை விரைவில் மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஆகியவற்றின் வேலை நிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 12 போக்குவரத்து சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. நாளை மே தினம் என்பதால் விடுமுறை ஆகும். அதனால் பலர் இன்று பள்ளி, அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துள்ளனர்.
மாநில அரசுகளிடம் உள்ள போக்குவரத்து அதிகாரத்தை மத்திய அரசு தன் வசப்படுத்த உள்ளது. போக்குவரத்து குறித்தவற்றை கவனிக்க மத்திய அரசு தனி ஆணையம் அமைக்க உள்ளது. போக்குவரத்து தொடர்பான பலவற்றில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடும்.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால், தற்போதுள்ள ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட் ரத்து செய்யப்பட்டு புதிய உரிமங்கள் எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து தான் ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட் பெற முடியும். பேருந்து, ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமை தனியாரிடம் சென்றுவிடும். வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல சட்டத்திருத்தத்தில் உள்ளது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications