மக்களுடன் கூட்டணியாம்: எப்படி எல்லாம் சமாளிக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை மாறாக மக்களுடன் கூட்டணி வைத்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிமுக கூட்டம் மற்றும் கோபி நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.
அந்த கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,

மக்கள் கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இன்றி தனியாக இல்லை. நாங்கள் மக்கள் கூட்டணியில் உள்ளோம். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிரிகள் அவரது கட்சிக்குள் தான் இருக்கிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டம்
காங்கிரஸ் அன்றி வேறு எந்த கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான ஏழை தொழிலாளிகள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்தி விடுவார்கள். மேலும் முதியோர் உதவித் தொகை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியும் நிறுத்தப்படும்.

தமிழகத்தில் ஆட்சி
நாம் கடினமாக உழைத்து நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் வரும் 2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும்.

ராணுவம்
இந்திய ராணுவம் சீனா, பாகிஸ்தான் ராணுவங்களை விட பலவீனமாக உள்ளது என்று மேடைதோறும் ஜெயலலிதா கூறி வருகிறார். தேசப்பற்றுள்ள யாரும் ராணுவம் மீது குறை கூற மாட்டார்கள். சீனா, பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ராணுவத் தளவாடங்கள் அதிகம் உள்ளன. மேலும் ஆசிய நாடுகளிலேயே இந்தியா தான் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்கிறது. ராணுவம் பலவீனமாக உள்ளது என்று கூறுவது தேசவிரோத செயல். அதனால் ஜெயலலிதா மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. மோடியால் பிரதமர் ஆகவே முடியாது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications