25 எம்எல்ஏக்கள் சர்க்கரை நோயால் கடும் அவதி.. சொகுசு ரிசார்ட்டுக்கு விரைந்தது ஆம்புலன்ஸ்
கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் சர்க்கரை நோயால் கடுமையாக அவதிப்பட்டு வருவதால் அம்பூலன்ஸ் வாகனம் அங்கு விரைந்துள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்திற்கு தற்போது ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது.
6 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உறவினர் உட்பட யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கைதிகள் போல் உள்ளனர். அவர்களை கண்காணிக்க அடியாட்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் தங்கி இருக்கும் சொகுசு ரிசார்ட்டுக்கு ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது. ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், 25 எம்எல்ஏக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்துதான் ஆம்புலன்ஸ் கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டுக்கு விரைந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தனி காரில் 2 மருத்துவர்களும் அங்கு விரைந்துள்ளனர். இதனால் கூவத்தூரில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.