தேர்தலை முன்னிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 'ஆம்புலன்ஸ்கள்'
சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவின்போது யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்,
"சென்னை , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 105 வாகனங்கள் பணியில் இருக்கும். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சுமார் நான்கைந்து வாக்குச் சாவடிகளுக்கு பொதுவாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்படும்.
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாகனங்களும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்ற மாவட்ட நிர்வாகத்தினரின் உதவியுடன் தமிழகம் முழுவதும் மொத்தம் 639 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ளலாம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.