‛கருப்புகொடி’.. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் திட்டம்.. எச்சரித்த உளவுத்துறை!அலர்ட்டான போலீஸ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு ஒருநாள் பயணமாக வருகிறார். சென்னை புதிய விமான முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி காட்ட முடிவு செய்துள்ளது. இதுபற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். இவர் இரவு 7.45 மணி வரை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ரூ.2,467 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதோபோல் தமிழ்நாட்டில் பிற ரயில் சேவை மற்றும் சாலை திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து பங்கேற்க உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய, மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.
அதாவது மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் மக்களோடு மக்களாக நின்று கருப்பு கொடி காட்டி கோஷமிட்டு போராட்டம் நடத்த வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய உளவுத்துறை மோப்பம் பிடித்த நிலையில் அதுபற்றி தமிழ்நாடு உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தான் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு இரும்புகோட்டை போன்று பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
அதன்படி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை வந்து இறங்கும் பிரதமர் மோடி சென்னையில் இருந்து புறப்படும் வரை 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும். இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications