அமித்ஷா வருகையால் தமிழக கட்சிகள் கலங்கிப் போயிருக்கிறதாம்.. சொல்கிறார் தமிழிசை
அமித்ஷாவின் தமிழக வருகையால் அரசியல் கட்சிகள் அனைத்துக் கலக்கத்தில் உள்ளதாக தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு வருவதைக் கண்டு அரசியல் கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜகவின் அகில பாரத தலைவர் அமித் ஷா வருகிற 22, 23 24 தேதிகளில் தமிழகம் வரவிருக்கிறார். சூறாவளி சுற்றுப் பயணமாக எல்லா மாநிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் அகில பாரத தலைவர், தமிழகத்திற்கும் வருகிறார், நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வு.

அடிப்படை கட்டமைப்பு
அவரது பயணம் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவுமாக அமையும். மேலும், தமிழக பாஜக தொண்டர்களை, நிர்வாகிகளை, அணி மற்றும் பிரிவு தலைவர்களை பல்வேறு குழுக்களின் தலைவர்களை சந்தித்து, உரையாடி வழிகாட்டுதல் தரவுள்ளார். அவரது வருகை குறித்து கட்சியில் மிக உற்சாகமாக உள்ளனர்.

கட்சிகள் கலக்கம்
அவரது வருகை கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தத் துணை நிற்கும். தொண்டர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர். தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமுற்றுள்ளன. அவரது வருகையில் தமிழக அரசியலில் நேர்மறைதாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்றே அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

மீனவர்கள் நலன்
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவு இல்லத்தைத் திறக்கும் பொருட்டு இராமேஸ்வரம் வந்திருந்த பாரத பிரதமர், தமிழக மக்களின் உற்சாகம் கண்டு பெருமிதம் கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் இனி நடப்பவை நல்லாதானே இருக்கும். தமிழக மக்களும் இனி பயன்பெறுவார்கள் என்று மோடி கூறினார். வெறும் ஓட்டு வாங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சிகள் கலங்கிப் போகும் வகையில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவுள்ளது. படகுகள் வாங்கும் உதவித் திட்டத்தை அறிவித்து பயனாளிகளுக்கு காசோலை வழங்கி படகுக்காரர்களும் பணக்காரர்கள் ஆகும் நல்லதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மீனவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த சுமார் 200 கோடி ரூபாய் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கான ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

குறை கூறும் கட்சிகள்
பாரதப் பிரதமர் மக்கள் நலத்திற்காக அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களையுமே குறைகூறி வரும் எதிரக்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முழு வீச்சாக மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு திட்டத்தையும் குறைகூறி வருகின்றனர். ஆனால், மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்பதுதான் உண்மை. ரேஷன் கடையில் அரசி கிடைக்காது, மானிய விலையில்சிலிண்டர் கிடைக்காது என்பது போன்ற பொய்களைக் கட்டவிழ்த்து வருகின்றனர்.

ரேஷன் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும்
உண்மையில் ஆதார் எண் இணைக்கப்பட்டதால், ஏறக்குறைய 3.5 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ வீதம் அரிசி தொடர்ந்து வழங்கப்படும். அரிசி கிலோ 3 ரூபாய்க்கு, கோதுமை கிலோ ரூ. 2க்கும் தொடர்ந்து கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 6000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

சிலிண்டரின் விலை குறைவு
வருடம் 12 கேஸ் சிலிண்டர்கள் என்ற வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது தொடர்கிறது. மானியமும் தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ1000 உச்சத்தைத் தொட்ட மானிய விலை சிலிண்டரின் விலை தற்போது ரூ. 500 ரூ450 என வந்து விட்டது. தற்போது ஜி.எஸ்.டியின் தாக்கத்தினால் ஒரு சிலிண்டருக்கும் ரூ41 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மோடி அரசு மக்களுக்குச் சுமைகளை ஏற்றுகிறது என்று வாய் கூசாமல் அறிக்கை விடும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவாரா? இல்லை அறிந்தும் அறியாதது போல நடிக்கிறாரா? என்று தெரியவில்லை

நீட் தேர்வு குளறுபடியால் மாணவர்கள் பாதிப்பு
நீட் தேர்வு பற்றியும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகம் ஓராண்டு விலக்கு பெற்றிருந்தது. அதன் பிறகு மாணவர்களின் தகுதியையும் திறமையையும் உயர்த்தும் முயற்சியில் இறங்காமல் வாளாவிருந்துவிட்டு தற்போது மீண்டும் மீண்டும் விலக்கு கேட்கிறது தமிழக அரசு. ஆனால், உண்மையில் கிராமபுற மாணவர்களும் ஏழை மாணவர்களும் தங்களைப் தயார் செய்து கொண்டு, தேர்வும் எழுதி, தேர்ச்சியும் பெற்றுவிட்டு தமிழக அரசியல் சூழ்நிலை காரணமாக தத்தளித்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசின் 85 சதவீதம், 15 சதவீதம் என்ற இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன. ஆனாலும், மத்திய அமைச்சர் நட்டா சமூக நீதிக்கான இட ஒதுக்கீடுகள் தொடரலாம் என்று அறிவித்துள்ளார். தமிழக அரசியல் குழப்பங்களால் தேர்வான மாணவர்கள் பெற்றோர்கள் பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ளனர். அட்மிஷன் நடக்கக் காலதாமதம் என்பதால் அவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்களும், தமிழ் வழிக்கல்வி மூலம் படித்தவர்களும் நீட் தேர்வை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுடன் சுமூக உறவு
அதிமுகவினர் எல்லோரும் ஓர் அணியாகத் திரண்டு நல்லாட்சியை வழங்க வேண்டுமென்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது வராத திட்டங்களை தற்போதைய தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது தமிழக அரசு, மத்திய அரசிடமும் மண்டியிடுகிறது என்று விமர்சித்துள்ளார். இது மிகவும் தவறான பிரச்சாரம். மத்திய, மாநில அரசுகளிடையில் நல்ல சுமூகமான உறவு இருந்தால் மட்டுமே, மாநில மக்களுக்கு நல்ல வளர்ச்சித் திட்டங்களும் பயன்களும் கிடைக்கும் என்பதை உணர்ந்து தமிழக அரசு சுமூகமான உறவைப் பேணி வருவதைக் கொச்சைப்படுத்தியுள்ளார் என்று சொல்ல வேண்டும்.

ஆலோசனைக்குப் பின் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி உட்பட அனைத்தும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டை வழங்க ஏற்பாடு செய்த பின்னரே (குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் பஞ்சாப்) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளங்கை நெல்லிக்கனி
பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வரும் துணிவில்லாத காரணத்தினாலேயே யூபிஏ அரசு பின்வாங்கியது. ஆனால், இன்று துணிவுடனும் நம்பிக்கையுடனும் சுளிவுடனும், நீக்குப் போக்காக நடந்து கொண்டு வெற்றிகளை ஈட்டியிருக்கும் மோடி அரசைக் கண்டு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலங்கியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications