நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதியில் ஜெ. போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியப் பிரதமராக்க அதிமுகவினர் முனைப்புடன் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டனர். முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மனுக்களை வழங்கியுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

விருப்பமனு
முதல்வர் ஜெயலலிதா, 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வரும் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று கடந்த 11ஆம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காலை 10 மணி முதல் விண்ணப்பமும் விருப்ப மனு வழங்கப்பட்டது.

4 கவுண்டர்கள்
இதற்காக, அலுவலக வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை வாங்கினர்.

ஜெ. போட்டியிட 34 மனு
இதில், பெரும்பாலானோர், முதல்வர் ஜெயலலிதா, தங்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 6 தனித் தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 34 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்டது.

ஒ.பன்னீர் செல்வம்
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியிலும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி தொகுதியிலும், ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தனர்.

நத்தம் விஸ்வநாதன்
இதேபோல், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கலிலும், பா.வளர்மதி மத்திய சென்னை மற்றும் தென் சென்னையிலும், கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியிலும், வைத்திலிங்கம் தஞ்சாவூரிலும், பழனியப்பன் தர்மபுரியிலும், சின்னையா ஸ்ரீபெரும்புதூரிலும், ஜெ. போட்டியிட மனு அளித்தனர்.

விருதுநகரில் வைகை செல்வம்
ரமணா தென் சென்னையிலும், ப.மோகன் கள்ளக்குறிச்சியிலும், ஜெயபால் மயிலாடுமுறையிலும், எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடியிலும், முக்கூர் சுப்பிரமணியன் திருவண்ணாமலை மற்றும் ஆரணியிலும், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விருதுநகரிலும் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுத்தனர்.

தென் சென்னையில்
இதேபோல சென்னை மேயர் சைதை துரைசாமி தென் சென்னை தொகுதியிலும், எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், கே.பி.கந்தன் தென்சென்னை மற்றும் திருச்சியிலும், தமிழ்செல்வன் பெரம்பலூர் தொகுதியிலும், வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன் நாகர்கோவிலிலும், முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் கோவையிலும் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.

திருநெல்வேலியில்
அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் இன்பதுரை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.

700 மனுக்கள்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்க ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று ஒரு நாள் மட்டும் 700க்கும் அதிகமாக மனுக்கள் பூர்த்தி செய்து அளிக்கப்பட்டன. வரும் 27ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்பட உள்ளது. மனுதாரர் ஒவ்வொரு வரும் ரூ.25 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications