விருது மேல் விருது வாங்கும் எங்கள் அம்மா… பட்ஜெட் உரையில் ஓ.பி.எஸ் புகழாரம்
சென்னை: விருது மேல் விருது வாங்கும் எங்கள் அம்மா, 3 எழுத்து மந்திரம் எங்கள் அம்மா, நானே வணங்கும் நான்காம் தமிழ், எட்டாம் அறிவு, ஒன்பதாம் வள்ளல் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் புகழாரம் சூட்டினார்.
2015- 16 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் சட்டசபையில் அவர் உரையாற்றுகையில், மத்திய அரசின் பங்கு தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் மாநில அரசு கடும் நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
மூன்றெழுத்து மந்திரம்
வாஞ்சையே உருவாய் வள்ளலே திருவாய், தமிழகத்தை நடத்தும் எங்கள் அம்மா, வஞ்சகத்தை தகர்த்து எறிந்து நெஞ்கத்தை உயர்த்தி நிற்கும், தென்னகத்தின் தமிழகமே, தேசியத்தின் முதலிடமாய், விருது மேல் விருது வாங்கும் எங்கள் அம்மா, 3 எழுத்து மந்திரம் எங்கள் அம்மா, நானே வணங்கும் நான்காம் தமிழ், எட்டாம் அறிவு, ஒன்பதாம் வள்ளல், வாழ்வெல்லம் வழிநடத்தும் எங்கள் அம்மா, மாண்பு மிகு அம்மாவின் பொற்பாதங்களில் எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன் என்று கூறினார்.
அம்மாவுக்கு நன்றி
தமிழகத்தின் விடிவெள்ளி, ஏழைகளின் ஏந்தல், அப்பழுக்கற்ற செயல்களால் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மாண்புமிகு அம்மாவின் ஆசியுடன் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். தொடர்ந்து 5 வது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கொடுத்த அம்மாவுக்கு நான் என்றென்றும் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
துணிச்சலான நடவடிக்கை
காவிரி, முல்லை பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றது. மின்சக்தி உற்பத்தியை பெருக்கியது, துணிச்சலான நடவடிக்கை எடுத்த எங்கள் தன்னிகரில்லா தலைவி, செயலாற்றி வெற்றி கண்ட எங்கள் தலைவியின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் கண்டுள்ளது.
தன்னிகரில்லா தலைவி
இன்னும் மும்முனை திட்டம் தொடரும். மதி நுட்பம் வாய்ந்த தன்னிகரில்லா தலைவி புரட்சித்தலைவி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளார். வறட்சி காரணமாக வரி உயரவில்லை.
மத்திய அரசு
பெட்ரோல் விலை மாற்றம் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்பட்டது. சமூக திட்டங்கள் காரணமாக நிதிச்சுமை அதிகரித்து விட்டது. பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு பெரும் நிதிச்சுமையை தாங்க வேண்டியுள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஒரே தட்டல்தான்
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா என்று உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மேஜைகளை தட்டோ தட்டென்று தட்டி அமர்க்களம் செய்தனர். இதை கேட்கக்கூடாது என்றுதான் திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர் போலும்.












Click it and Unblock the Notifications