"அம்மா" கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்: ஜெ.வுக்கு கருணாநிதி அட்வைஸ்
சென்னை: அம்மாவுக்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.வழக்கமாக 'ஜெயலலிதா அம்மையார்' என்று கூறும் கருணாநிதி நேற்றைய கூட்டத்தில் அம்மா என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்தியாவிலேயே முதல்வர் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. முதல்வர், அவருக்கான பணிகள் எதையும் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவரது உடல்நலம் ஒத்துழைக்கவில்லை. முதல்வரைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக இருக்கக் கூடாது. மக்களுக்கு பகிரங்கமாக தெரியவேண்டும். அதுதான் ஜனநாயக ஆட்சியின் இலக்கணம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலந்தூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது அவ்விழாவில் பங்கேற்று பேசிய கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
வெறும் விளம்பரம்
ஒரு அரசு என்பது மக்களைப் பாதுகாக்கின்ற அரசாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அதிமுக அரசு விபரீதமான எண்ணங்களை கொண்ட அரசாக இருக்கிறது. விளம்பரத்தை தவிர வேறு எதுவும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை.
அதிமுக அரசின் திட்டம்
திமுகவைப் பொறுத்தவரை, யார் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நன்றி தெரிவிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால், அப்படி எந்த திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டுவந்ததாகக் தெரியவில்லை.
உடல்நலம் சரியில்லை
முதல்வர் இல்லாத, ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழகம் தான். சுயமாக ஆட்சி பணிகள் நடைபெறவில்லை; அதற்கு காரணம் அவருக்கு உடல் நலம் சரியில்லை. உடல்நலம் சரியில்லாத அம்மா ஓய்வெடுக்கலாம்.
நடப்பது ஆட்சியா?
பன்னீர்செல்வம் படாதபாடு படுகிறார். என்னை அவர் தனியாக பார்த்தால்,'ஓ' என்று கத்தி அழுதுவிடுவார். நடப்பது ஆட்சி அல்ல; ஒரு காட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.
பதில் தாக்குதல் என்ன?
இதற்கு ஜெயலலிதா கொடுக்கப்போகும் பதிலை நினைத்தால்தான் நமக்கு பயந்து வருது... ஒருவேளை நேரடியாக அறிக்கை தருவாரா? அல்லது சித்திரகுப்தனை விட்டு நமது எம்.ஜி.ஆரில் எழுதச் சொல்வாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.