மாயமான ராணுவ விமானம்: தூத்துக்குடி வீரரின் கதி என்ன?
தூத்துக்குடி: சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானம் மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி வீரரின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி செம்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். பிளஸ் டூ முடித்து ஐடிஐ படித்துள்ள அவர் 1997ல் இந்திய கடற்படை பணிக்கு சேர்ந்தார். 19 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி வந்தார். அவரது மனைவி சுமித்ரா. அவர்களுக்கு ராகுல், அன்புசெல்வன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சென்னை கே.கே. நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். முத்து கிருஷ்ணன் குடும்பத்தின் ஆறாவது பையன் என கூறப்படுகிறது. அவரது தம்பி மாரிமுத்து கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். சென்னை தம்பாரத்திலிருந்து அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானத்தில் முத்து கிருஷ்ணனும் பயணம் செய்துள்ளார். அவரது கதி என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை. இது குறித்த தகவல் செம்பூரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அன்று மாலையே சென்னை சென்றனர். மாயமான விமானத்தில் பயணித்த 29 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரில் உள்ளனர். இதற்கிடையே மாயமான விமானம் வங்காள விரிகுடா பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி கடலோர காவல் படையினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டனர். கடலோர காவல் படை ரோந்து படகில் இரவு பகலாக தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.












Click it and Unblock the Notifications