''ஜிதேத்திரா சிங்ஜி.. ஹவ் ஆர் யூ சார்???''
கரூர்: ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காத காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கு குட்டு வைத்தும் கரூரைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
குற்ற வழக்கில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பை நீர்த்துப் போக வைக்கும் காரியங்களில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது.
அதன் ஒரு படியாக, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் காக்கும் வகையில் மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்தது. ஆனால், இந்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்றும், அதைக் கிழித்து எறிய வேண்டும் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியிலும், அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில், ராகுல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவதே நல்லது என கரூரில் இருந்து ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் டெல்லிக்கு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கரூர் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரான ஸ்டீபன் பாபு என்ற அந்தக் கவுன்சிலர் மத்திய அமைச்சரான ஜிதேந்திரா சிங்குக்கு இதுதொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...
Respected Mr.Jitendraji, How are you Sir?
நமது மாபெரும் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., எம்.எல்.ஏக்கள் பேச்சு குறித்து கருத்து தெரிவித்திருப்பதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். ஏனென்றால் அவரது பேச்சு நமது நாட்டின் இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கவர்ந்துள்ளது. மேலும் அத்தனை பேரும் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
நமது மூத்த லைவர்கள் சிலர் தவறான அரசியல் புரிந்து வருகிறார்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தவறான நிர்வாகத்தால் கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
எனவே அந்த மாதிரியான தவறான தலைவர்களை நீங்கள் கட்சியை விட்டு எடுக்க வேண்டும். அப்போதுதான் மாபெரும் தலைவரான ராகுல் காந்தி தலைமையில் நமது கட்சி வளர முடியும்.
எனவே நமது இளைஞர்கள் அனைவரும் ராகுல் காந்தியை மட்டுமே விரும்புகிறார்கள். அவரது அரசியல் நாட்டின் வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை நோக்கியே உள்ளது என்று கூறியுள்ளார்.
உங்களது நற்செய்திக்காக காத்திருக்கிறேன் என்று கூறி கடிதத்தை ஸ்டீபன் பாபு முடித்துள்ளார்!












Click it and Unblock the Notifications