பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. மயிலாடுதுறை டாஸ்மாக் ஊழியர்களுக்கு மறக்கவே முடியாத பரிசு
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மீது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள். அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும்.. குடிமகன்களுக்கு தீர்வு தான் இன்று வரைகிடைக்கவே இல்லை.. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் கடையின் கதவை பூட்டிய குடிமகன்கள், கடை விற்பனையாளர்களை அதிர வைக்கும் செயலை செய்தனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தால் 4,829 மதுக் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகளை நவீனமயமாக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தடுக்கவும் 'எண்ட் டூ எண்ட்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மது பாட்டில்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாவது முதல் கடைகளில் விற்பனையாவது வரை அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்க முடியும்..

அதேபோல் ஊழியர்கள் எவ்வளவு மதுவிற்றார்கள்.. என்ன மதுவிற்றார்கள்.. எந்த நேரத்தில் எந்த மதுவிற்பனையாகிறது.. எந்த மதுபாட்டில் குறைவாக வாங்கப்படுகிறது.. எந்த ஊரில் எந்த மதுவிற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. மதுபாட்டில்கள் விற்பனை குறித்து கணக்கு வழக்கு போன்றவற்றை அறிய முடியும். துல்லியமாக எல்லா நிகழ்வுகளை அரசால் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் கடையில் உள்ள கூடுதல் பணத்தை எளிதாக அறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சீபுரம் (வடக்கு), காஞ்சீபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் , மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளரிடம் செல்போன் வடிவிலான 'ஸ்கேனர்' கருவியும், சிறிய வடிவிலான 'பில்' போடும் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கருவிகளும் 'புளூடூத்' மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. என்ன தான் திட்டத்தை அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க முடியவில்லை என்பது குடிமகன்களின் குற்றச்சாட்டமாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபற்றி புகார் தெரிவித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொறுத்து பொறுத்து பார்த்த குடிமகன்கள், திடீரென நேற்று இரவு பொங்கி எழுந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவுவாயில் கதவை பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தின்போது ஈசானிய தெரு அரசு மதுபான டாஸ்மாக் கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் அலுவலர்கள், பணியாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் காரணமாக சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிமகன்களை போலீசார் சமாதானம் செய்தனர். அரசு நிர்ணயித்த விலைக்கு விற்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக டாஸ்மாக் கடை அலுவலர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications