தேமுதிகவை இழுக்க பேரம் பேசிய திமுக... பாமக சார்பில் புகார் தருவோம்- அன்புமணி ராமதாஸ்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியது தொடர்பாக பாமக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க ரூபாய் 500 கோடி வரை பேரம் பேசியது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆணித்தரமாக கூறி வருகிறார். மேலும் தனது குற்றச்சாட்டை பின்வாங்க மாட்டேன் என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். எனவே இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க உள்ளோம். சென்னை ஹைகோர்ட்டிலும் இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்ற மாநிலங்களை போல தமிழக முதல்வரையும், மின்சாரத்துறை அமைச்சரையும் சந்திக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்து வேதனை அளிப்பதாக உள்ளது. இப்படி ஒரு நிலை நீடித்தால் வளர்ச்சி திட்டங்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்?
தமிழகத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடு நன்றாகவே உள்ளது. ஆனால் எனது கோரிக்கை என்னவென்றால், நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் பொதுமக்கள், வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பது தான். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், நியாயத்துடனும் நடத்தவேண்டும் என்று மீண்டும் நான் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications