மது ஒழிப்பு பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா?...அன்புமணி கேள்வி
சென்னை : மது ஒழிப்பு பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மாநாட்டில் 30-ந் தேதி பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக பேசுகிறார். இதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெனீவா புறப்பட்டுச்செல்கிறார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், போர் குற்றங்களுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை இந்தியா ஆதரிக்க கூடாது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழக அரசும் மவுனமாகவே இருக்கிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சியினரையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து உடனடியாக பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் போர் குற்றம் தொடர்பான சட்டமே கிடையாது. அப்படி இருக்கும் இலங்கையில் விசாரணை நடந்தால் அங்கு என்ன தண்டனை வழங்க முடியும். தற்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.
தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசாக மத்திய அரசு உள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இறுதி கட்ட போர் நடந்த போது நாங்கள் மத்திய அமைச்சரவையில் இல்லை.
நாங்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்திய போது தி.மு.க. மவுனமாகவே இருந்தது. இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. அன்றும் உதவி செய்யவில்லை. இன்றும் உதவி செய்யவில்லை. துரோகம் தான் விளைவித்தது.
தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வரும் சாத்தியம் இல்லை என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறி உள்ளார். கலால் துறை மதுவை கட்டுப்படுத்தும் துறை என்பது அவருக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. எல்லா மாநிலங்களிலும் 3 முதல் 5 சதவீதம் வருமானம் மதுவால் தான் வருகிறது. ஆனால் தமிழகத்தில் 3-ல் 1 பங்கு வருமானம் மதுவால்தான் வருகிறது. இதைவிட கேவலம் வேறென்ன இருக்க முடியும்.
தமிழகத்தில் செயல்படும் 10 மது ஆலைகளில் 5 தி.மு.க.வினரிடமும், 3 அ.தி.மு.க.விடமும், 2 காங்கிரசாரிடமும் உள்ளது. மது வேண்டாம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். மது ஒழிப்பு என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது. மது ஒழிப்பு பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா?
அக்டோபர் 2-ந் தேதி மதுவிலக்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். மக்கள் அ.தி.மு.க. மீது ஆத்திரத்துடன் உள்ளனர். தி.மு.க. மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். ஏற்கனவே ஊழல் காரணமாக தி.மு.க.வை மக்கள் விரட்டியடித்தார்கள் அதை இன்னும் மறக்கவில்லை. வருகிற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
இவ்வாறு அன்புமணி கூறினார்.












Click it and Unblock the Notifications