"கிங்" ஆகனும்னா தாய்லாந்து, பூடான் போங்க... "கேப்டனுக்கு" கட்டையைக் கொடுக்கும் அன்புமணி!
சென்னை: விஜயகாந்த் "கிங்" ஆக வேண்டும் என்றால் தாய்லாந்து, பூடான் நாட்டிற்கு தான் போக வேண்டும். அங்கு தான் "கிங்" இருக்கிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, இங்கு "கிங்"கிற்கு வேலை இல்லை. ஒருவேளை விஜயகாந்த் 200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மனநிலையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் வி.ஜி.பி. மைதானத்தில் வரும் சனிக்கிழமை மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதனை பாமக முதல்வர் வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அப்போது அவர் பேசியதாவது:-

கோபம்...
50 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க, அ.தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று மக்கள், குறிப்பாக இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஸ்டாலின் செய்தாரா..?
தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது 56 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தனர். தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது இளைஞர்கள், மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்? இன்றைக்கு செய்வோம் என்று சொல்கிறார்.

காப்பி அடிக்கிறார்...
லோக் அயுக்தா பற்றி கடந்த ஒரு வருடமாக நான் சொல்லி வருகிறேன். நிர்வாக சீர்திருத்தங்கள், சேவை உரிமை சட்டம், வெளிப்படையான ஆட்சி இதை எல்லாம் எங்கள் ஆட்சியில் செய்வோம் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். எங்களை பார்த்து அப்படியே ஸ்டாலின் காப்பி அடிக்கிறார்.

கொள்கைப்பரப்பு செயலாளராக..
இதனால் எங்களுடைய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக மாறியுள்ளார். எங்கள் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கோ அதில் தினமும் ஒன்றை ஸ்டாலின் சொல்லி வருகிறார்.

கிங் ஆக மாற...
விஜயகாந்த் கிங் ஆக வேண்டும் என்றால் தாய்லாந்து, பூட்டான் நாட்டிற்கு தான் போக வேண்டும். அங்கு தான் கிங் இருக்கிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, இங்கு கிங்கிற்கு வேலை இல்லை. ஒருவேளை 200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மனநிலையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

கரைந்து போகும் கூட்டணி...
மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம், எங்கள் அணி ஜனநாயக கூட்டணி என்று கூறினார்கள். தேர்தலுக்கு பிறகு தான் நாங்கள் ஒன்றாக கூடி முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது விஜயகாந்த் வந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். அது கூட்டணி இல்லை, கரைந்து போகும்.

150 தொகுதிகளில் வெற்றி..
பா.ம.க. வருகின்ற தேர்தலில் 150 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும். எங்கள் அணிக்கு ஜி.கே.வாசன், சரத்குமார் வந்தால் வரவேற்போம். தி.மு.க., அ.தி.மு.க. தவிர எந்த கட்சி வந்தாலும் வரவேற்போம்' என இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications