ரங்கசாமியை சந்தித்தார் அன்புமணி.. புதுச்சேரியில் போட்டி 'கன்பர்ம்ட்'!

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பாமக போட்டியிடும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
பாமக வருகிற லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொகுதிளையும், வேட்பாளர்களையும் நாளை அறிவிக்கவுள்ளனர்.
இதுவரை லோக்சபா, சட்டசபைத் தேர்தல் எதிலும் போட்டியிடாத அன்புமணி ராமதாஸ், லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவர் எங்கு போட்டியிடுவார் என்பதிலும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அவர் வன்னிய வாக்காளர்கள் அதிகம் உள்ள புதுச்சேரியில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.
இதற்காக ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸின் ஆதரவை பாமக நாடியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ரங்கசாமியை சந்தித்தார் அன்புமணி.
தனியார் ஹோட்டலில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. அரை மணி நேரம் இருவரும் பேசினர். என்ன பேசப்பட்டது என்பது குறித்து ரங்கசாமி கட்சி தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. பொதுவான அரசியல் சூழ்நிலை குறித்து பேசினோம். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க போட்டியிடும் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த தொகுதியில் அன்புமணியே போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, ரங்கசாமி சந்திக்கலாம் என்று தெரிகிறது.
அனேகமாக, தமிழகம் மற்றும் புதுவையில், லோக்சபா தேர்தலுக்காக அமையும் முதல் கூட்டணியாக பாமக - ரங்கசாமி கூட்டணி இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications