தர்மபுரியில் உள்ள மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்த அன்புமணி ராமதாஸ்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமத்தை அத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமத்தை அத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்துள்ளார்.
அதன்படி இந்த கிராமத்தில் ஸ்மார்ட் பள்ளிகள், அதி நவீன மருத்துவ வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். வீடு இல்லாத கிராம மக்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித்தரப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, நூலகம், அகண்ட அலைவரிசை சேவை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின்படி செய்து தரப்படும்.
2016-ம் ஆண்டிற்குள் இந்த கிராமம் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கொண்ட முன்மாதிரி கிராமமாக மாற்றப்படும். நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வகை செய்வதுடன், முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு பயன்களையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.