பண்ருட்டியில் 2 முந்திரிக்கொட்டைகள், இரண்டும் அதிமுகவில்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: பண்ருட்டியில் 2 முந்திரிக்கொட்டைகள் இருக்கிறது. இரண்டுமே அதிமுகவில் சரணடைந்துவிட்டன என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் இளைஞர்கள் எழுச்சி மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபேற்றது. கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரான டாக்டர் கோவிந்தசாமி தலைமையில் நடந்த மாநாட்டில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ராமதாஸ்
இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்து பிறருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. பண்ருட்டி என்றாலே பலாப்பழமும், முந்திரிக்கொட்டையும் தான் நம் நினைவுக்கு வரும். பலாப்பழத்தின் வெளியே முட்கள் இருந்தாலும் உள்ளே இனிப்பான சுளைகள் இருக்கும். அப்படிப்பட்ட பலாப்பழம் போன்றவர் தான் டாக்டர் ராமதாஸ்.
முந்திரிக் கொட்டைகள்
சாதாரணமாக பழத்திற்குள் தான் கொட்டைகள் இருக்கும். ஆனால் முந்திரியில் மட்டும் பழத்திற்கு வெளியே கொட்டைகள் இருக்கும். பண்ருட்டியில் 2 முந்திரிக் கொட்டைகள் உள்ளன. அந்த 2 முந்திரிக் கொட்டைகளும் அதிமுகவிடம் சரணடைந்துள்ளன.
முதல்வர்
முதல்வர் மாவாட்டம் தோறும் சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்க்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அப்படியா நடக்கிறது? 4 அதிகாரிகள் தான் தமிழகத்தை நிர்வகித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக
மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை வெறுக்கிறார்கள். இந்த கட்சிகளுக்கு மாறாக அவர்கள் பாமகவை விரும்புகிறார்கள். ஏனென்றால் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்ட கட்சி பாமக.
திராவிட கட்சிகள்
2 திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு துரோகம் செய்தவை. திமுகவின் பெரிய கூட்டணி தலைவர் திருமாவளவன். கருணாநிதியின் நேரம் இப்படி இருக்கிறது.
காதல்
பாமக ஒன்றும் தலித்களுக்கு எதிரி கிடையாது. ஆனால் தலித் என்ற போர்வையில் ஒரு கும்பல் பெண்களை கடத்தி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. காதல் நாடகத்தால் இந்த கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலையாளிகள்
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் அறிவிப்பு வெறும் அரசியல் நாடகம் ஆகும். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை பார்க்க பரோல் கேட்ட நளினிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு தற்போது 7 பேரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கை பிரச்சனை
ராஜீவ் கொலையாளிகளை வைத்து திமுகவும் சரி, அதிமுகவும் சரி அரசியல் செய்கின்றது. நாங்கள் தான் இலங்கை பிரச்சனையில் அரசியல் செய்யவில்லை. இதை எல்லாம் நினைத்து நமது வேட்பாளர் கோவிந்தசாமியை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அன்புமணி.