அந்த விஷயத்தில் கமல் ஒரு தைரியமான மனிதர்... ரஜினியை போட்டுத் தாக்கும் அன்புமணி!
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும், புலி வருது புலி வருது என இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்று முதல் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5 நாட்கள் புகைப்படங்கள் எடுப்பதற்காக அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் தான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது கடவுள் கையில் தான் உள்ளது என்றார். கடைசி வரை அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை.
மதுரையில் பேசிய அன்புமணி
இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ரஜினியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பாமக நிர்வாகியை சந்திக்க வந்த அவரிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மக்கள் ஏமாற மாட்டார்கள்
அதற்கு பதிலளித்த அன்புமணி, இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும்.
புலி வருது புலி வருது..
20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். ஆனால், உறுதியான கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது, புலி வருது புலி வருது என்று சொல்வது போன்றுள்ளது.
நேரடியாக வரனும்
அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது.
கமல் தைரியமானவர்
அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். கமல், ஒரு தைரியமான நபர் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.